காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் திருக்கல்யாணம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதசுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு ஏலவார் குழலி அம்மைக்கும், ஏகாம்பரநாதசுவாமிக்கும் திருக்கல்யாண வைபவம் ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
திருமண திருக்கோலத்தில் காட்சியளித்த ஏகாம்பரநாதர் மற்றும் ஏலவார் குழலி
திருமண திருக்கோலத்தில் காட்சியளித்த ஏகாம்பரநாதர் மற்றும் ஏலவார் குழலி


காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதசுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு ஏலவார் குழலி அம்மைக்கும், ஏகாம்பரநாதசுவாமிக்கும் திருக்கல்யாண வைபவம் ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

பஞ்சபூதஸ்தலங்களில் நிலத்துக்குரியதாக இருந்து வருவது காஞ்சிபுரம் ஏகாம்பரநாதசுவாமி திருக்கோயில். பழமையும் வரலாற்றுச் சிறப்பும் உடைய இத்திருக்கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி உத்திரத் திருக்கல்யாணப் பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். 

கடந்த ஆண்டு கரோனா நோய்த்தொற்று அச்சுறுத்தல் காரணமாக திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டுக்கான திருவிழா இம்மாதம் 18 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவினைத் தொடர்ந்து தினசரி சுவாமியும், அம்மனும் வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகி வீதியுலா வந்தனர். இம்மாதம் 23 ஆம் தேதி அறுபத்து நாயன்மார்கள் திருக்கூட்ட ஊர்வலமும், இரவு வெள்ளித் தேர் உற்சவமும் நடந்தது. மறுநாள் 24 ஆம் தேதி மகாரதம் எனும் தேரோட்டம் நடைபெற்றது. தேரில் சுவாமியும்,அம்மனும் ராஜவீதிகளில் பவனி வந்தனர். 

தேரோட்டத்தை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.கிருபாகரன் கொடியசைத்தும், வடம்பிடித்து இழுத்தும் தொடக்கி வைத்தார். 26 ஆம் தேதி திருக்கோயிலின் வரலாற்று மகிமையை விளக்கும் வெள்ளி மாவடிசேவைக் காட்சியும் நடந்தது.

இதன் தொடர்ச்சியாக சனிக்கிழமை காலையில் ஏலவார்குழலியம்மை ஒக்கப்பிறந்தான் குளத்திற்கு எழுந்தருளி அங்குள்ள மண்டகப்படியில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் கோயில் மண்டபத்தில் ஏலவார் குழலியம்மைக்கும்,ஏகாம்பரநாதருக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையாளர் பொன்.ஜெயராமன், உதவி ஆணையாளர் மா.ஜெயா,ஆய்வாளர் பிரித்திகா, கோயில் செயல் அலுவலர்கள் ஆ.குமரன், வெள்ளைச்சாமி, செந்தில்குமார், காஞ்சிபுரம் சங்கர மடத்தின் ஆஸ்தான ஸ்தபதி நந்தகுமார், பெரிய காஞ்சிபுரம் வாணியர் தர்ம பரிபாலன சங்கத்தின் நிர்வாகிகள் ஆகியோர் உள்பட ஏராளமான சிவனடியார்கள்,பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் செயல் அலுவலர் ந.தியாகராஜன் தலைமையிலான விழாக்குழுவினர்,கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர். 

இம்மாதம் 30 ஆம் தேதி கொடி இறக்கமும், 31 ஆம் தேதி காலையில் 108 கலசாபிஷேகத்துடனும் விழா நிறைவு பெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com