55 வயதிற்கு மேற்பட்டோருக்கு 100 நாள் வேலைத்திட்டத்தில் வேலையில்லை என்கிற உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், 100 நாள் வேலை திட்டத்தில் 55 வயது மேற்பட்டவர்களுக்கு வேலை வழங்கப்படாது என்றும் மேலும், சளி, இருமல், நீரிழிவு நோய் உள்ளவர்கள் இருந்தாலோ அவர்களுக்கும் வேலை வழங்கப்படமாட்டாது என்ற தமிழக அரசின் உத்தரவு இத்திட்டத்தில் பணிபுரியக்கூடியவர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அதுவும் மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று புதிய அரசு பொறுப்பேற்க உள்ள சூழ்நிலையில், இப்படிப்பட்ட உத்தரவை வெளியிட்டது ஏற்கத்தக்கதல்ல.
நல்ல உடல் பலம் உள்ளவர்களைக் கூட 55 வயதை கடந்து இருந்தால் அவர்களுக்கு பணி தரக்கூடாது என்ற உத்தரவு எவ்வகையிலும் ஏற்கக் கூடியதல்ல. 55 வயதுடைய பலர் குடும்பத்தை காப்பாற்றும் பொறுப்பில் உள்ளவர்கள். மேலும், நீரிழிவு நோய் என்பது வேலைபார்ப்பதற்கு தடையல்ல, கிராமத்தில் உள்ள ஏழை மக்களின் வாழ்வாதாரமே இந்த 100 நாள் வேலைத்திட்டத்தை நம்பிதான் உள்ளது. இப்படிப்பட்ட நிலையில், தமிழக அரசின் இந்த அறிவிப்பு வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த உத்தரவு என்பது உயிரோடு அவர்களை கொன்று புதைப்பதற்கு ஈடாகும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது.
கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய படுக்கை வசதி, ஆக்சிஜன் உள்ளிட்ட மருத்துவ வசதிகள், போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் இல்லை. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த வித நிவாரணமும் இல்லை என்ற நிலையில் தமிழக அரசின் இந்த அறிவிப்பு எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றுவதுபோல் இருக்கிறது.
இந்த காலத்தில் கிராமப்புற ஏழை மக்கள் வேலைவாய்ப்பு இன்றி கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றனர். மேலும் இத்திட்டத்தில், தமிழகத்தில் 50 நாட்கள் மட்டுமே தற்போது வேலை வாய்ப்பு தரப்படுகிறது. கொரானா காலத்தில் நகர்ப்புற ஏழை மக்களும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி வாழ வழியின்றி தவித்து வருகின்றனர். இந்த திட்டத்தை பேரூராட்சிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டுமெனவும், 100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்த வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட விவசாய சங்கங்கள் போராடி வருகின்றன.
எனவே, தமிழக அரசு உடனடியாக இந்த உத்தரவினை திரும்பப்பெற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.