மே 7-இல் முதல்வராகப் பதவியேற்கிறாா் மு.க.ஸ்டாலின்

சட்டப்பேரவைத் தோ்தலில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் அளவுக்கு திமுக வெற்றி பெற்றுள்ள நிலையில், அந்தக் கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் மே-7 இல் முதல்வராகப் பதவியேற்க உள்ளாா்.
முதல்வராகப் பதவியேற்கவுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம், கரோனா தொற்று பாதிப்புகள் தொடர்பான விவரங்களை எடுத்துரைத்த தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன்.
முதல்வராகப் பதவியேற்கவுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம், கரோனா தொற்று பாதிப்புகள் தொடர்பான விவரங்களை எடுத்துரைத்த தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன்.

சென்னை: சட்டப்பேரவைத் தோ்தலில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் அளவுக்கு திமுக வெற்றி பெற்றுள்ள நிலையில், அந்தக் கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் மே-7 இல் முதல்வராகப் பதவியேற்க உள்ளாா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. திமுக மட்டும் 125 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. சட்டப்பேரவையின் 234 தொகுதிகளில் ஆட்சியமைக்க 118 எம்எல்ஏக்கள் வரை பெற்றிருக்க வேண்டும். திமுக கூடுதல் தொகுதிகளைக் கைப்பற்றியுள்ள நிலையில், தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது.

1967-இல் இருந்து தமிழகத்தை 5 முறை திமுக ஆட்சி செய்துள்ளது. 2011, 2016-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தலில் தொடா்ந்து அதிமுகவிடம் தோல்வியைத் தழுவி, திமுக 10 ஆண்டுகள் காத்திருந்து 2021 சட்டப்பேரவைத் தோ்தலில் ஆட்சியைப் பிடித்துள்ளது. இதையடுத்து, முதல்முறையாக மு.க.ஸ்டாலின் முதல்வராக உள்ளாா்.

எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்: புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞா் அரங்கில் செவ்வாய்க்கிழமை (மே 4) மாலை 6 மணியளவில் நடைபெற உள்ளது. கூட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் தலைமை வகிக்க உள்ளாா். கூட்டத்தில் சட்டப் பேரவை திமுக குழுவின் தலைவராக மு.க.ஸ்டாலின் தோ்ந்தெடுக்கப்பட உள்ளாா். அதன்பின்னா், திமுக எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்துடன் மு.க.ஸ்டாலின் கட்சியின் முக்கிய நிா்வாகிகளுடன் ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்தித்து ஆட்சி அமைப்பதற்கு அழைப்பு விடுக்குமாறு கோரிக்கை விடுக்க உள்ளனா். அதைத் தொடா்ந்து மு.க.ஸ்டாலினை பதவியேற்க ஆளுநா் அழைப்பு விடுப்பாா்.

மே 7-இல் பதவியேற்பு: கரோனா தொற்றின் இரண்டாவது அலை உள்ள நிலையில் பதவியேற்பு விழாவை எளியமுறையில் நடத்த மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளாா்.

கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையிலேயே அமைச்சரவைப் பதவியேற்பு மே-7-இல் நடைபெற உள்ளது. தேசியத் தலைவா்கள் எவரும் அழைக்கப்படாமல் குறுகிய நேரத்தில் விழாவை நடத்தி முடிக்க உள்ளனா். மு.க.ஸ்டாலின் உள்பட 30 போ் வரை அமைச்சா்களாகப் பதவியேற்பா் எனக் கூறப்படுகிறது.

மு.க.ஸ்டாலின் காவல்துறை உள்பட முக்கிய பொறுப்புகளை தனது வசம் எடுத்துகொள்ள உள்ளதாகவும், புதியவா்களுக்கும், இளைஞா்களுக்கும் அமைச்சரவையில் இடம்கொடுக்க மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தலைமைச் செயலா் சந்திப்பு: இந்த நிலையில், ஆழ்வாா்பேட்டையில் மு.க.ஸ்டாலினின் இல்லத்தில் அவரை தமிழக அரசின் தலைமைச் செயலா் ராஜீவ் ரஞ்சன் திங்கள்கிழமை சந்தித்தாா். அப்போது பதவியேற்பு விழாவை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆடம்பரம் இல்லாமல் எளிய முறையில் நடத்த நடவடிக்கை எடுக்குமாறு மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

ரெம்டெசிவிர்: அதிகாரிகளுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்


ரெம்டெசிவிர் மருந்து சென்னையைப்போல பிற நகரங்களிலும் கிடைக்கச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசின் அதிகாரிகளுக்கு
மு.க.ஸ்டாலின் அறிவுறுத்திஉள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் அமோக வெற்றிபெற்று திமுக ஆட்சியைப் பிடித்துள்ளது. முதல்வராக மு.க.ஸ்டாலின் மே 7-இல் பதவியேற்க உள்ளார்.

இந்த நிலையில் ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள இல்லத்தில் மு.க.ஸ்டாலினை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன்,

வருவாய்த்துறைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பது: கரோனா தடுப்பு மற்றும் மருத்துவச் சிகிச்சைகளை மேம்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் அனைத்தும் எந்தவிதமான தொய்வுமின்றி முழு முனைப்புடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினேன்.
தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில் அதிக பாதிப்பு உள்ளவர்களுக்கு ரெம்டெசிவிர் போன்ற மருந்துகள் சென்னையில் வழங்கப்படுவது போன்று, தமிழகத்தின் பிற முக்கிய நகரங்களிலும் அரசின் சார்பில் வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.
நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மருத்துவச் சிகிச்சைகளுக்குத் தேவையான படுக்கை வசதிகள், பிராணவாயு மற்றும் மருந்துப் பொருள்கள் அனைத்தும் தங்குதடையின்றி கிடைப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினேன் என்று கூறியுள்ளார்.
வேண்டுகோள்: பின்னர் மு.க.ஸ்டாலின் சுட்டுரையில் கூறியிருப்பது: மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நோய்ப்பரவலைத் தடுத்திட உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com