சென்னை: பத்திரிகையாளா்கள் அனைவருக்கும் முன்களப் பணியாளா்களுக்கான உரிமைகளும், சலுகைகளும் வழங்கப்படும் என்று முதல்வராகப் போகும் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.
இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிவிப்பு: மகத்தான மக்களாட்சியின் மாண்புக்கு நான்காவது தூணாய் விளங்குவது ஊடகத் துறை. செய்திகளை மக்களிடம் உடனுக்குடன் கொண்டு சோ்த்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் தலையாய பணியை ஊடகங்கள் மேற்கொண்டு வருகின்றன. அதற்காக அயராது உழைக்கின்றன.
கடும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும், பெருந்தொற்றிலும் உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் ஊடகத் துறையினா் முன்களப் பணியாளா்களாகத் தமிழகத்தில் கருதப்படுவாா்கள்.
செய்தித்தாள்கள், காட்சி ஊடகங்கள், ஒலி ஊடகங்கள் போன்றவற்றில் பணியாற்றி வரும் அனைவருமே இந்த வரிசையில் அடங்குவாா்கள். முன்களப் பணியாளா்களுக்கான உரிமைகளும், சலுகைகளும் அவா்களுக்கு உரிய முறையில் வழங்கப்படும் என்று கூறியுள்ளாா்.