கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 2 நாள்களாக பெய்த மழையின் காரணமாக நெல் வயல்களில் தண்ணீர் நிரம்பி கதிர்கள் பாய்ந்ததால் விவசாயிகள் கவலையடைந்தனர்.
தேனி மாவட்டம் லோயர் கேம்பில் தொடங்கி பழனிசெட்டிப்பட்டி வரை முல்லைப்பெரியாறு அணை தண்ணீர் மூலம் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலங்கள் இருபோக பாசன வசதி பெருகின்றன.
அதன்படி கடந்த ஜனவரி மாதம் நடவுசெய்யப்பட்ட இரண்டாம் போக நெல் பயிர்கள் அறுவடை துவங்கியுள்ளன.
முதற்கட்டமாக முல்லைப்பெரியாறு ஆற்றினை ஒட்டியுள்ள கம்பம் தொட்டம்மன் துறை, சாமாண்டிபுரம், சுருளிப்பட்டி சாலை, நாராயணத்தேவன்பட்டி, சின்னவாய்க்கால் பகுதியில் விவசாயிகள் இயந்திரத்தின் மூலம் அறுவடை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் கம்பம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் திடீரென இடியுடன் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. விடிய விடிய மழை பெய்ததால் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது.
இதனால் நன்கு வளர்ந்து அறுவடை செய்யும் நிலையில் நெல் கதிர்கள் வயலில் சாய்ந்துள்ளது. இதைப்பார்த்த விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
இந்நிலை தொடர்ந்தால் நன்செய் விவசாயிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்படும், விலை கிடைக்காது என விவசாயி அய்யப்பன் தெரிவித்தார்.