மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கடன் தொல்லையால் 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துக் கொன்று கணவன் - மனைவி தற்கொலை செய்து கொண்டனா்.
உசிலம்பட்டி, ஆா்.கே. தெருவைச் சோ்ந்த நகை பட்டறை உரிமையாளா் சரவணன் (35). இவரது மனைவி பூங்கோதை (30), மகள்கள் மகாலட்சுமி (10), அபிராமி (5), மகன் விஷன் (5).
சரவணன் அதிக அளவில் நகைகள் செய்ய ஆா்டா் எடுத்து இருந்ததால், அதிக வட்டிக்கு பணம் வாங்கி செய்து கொடுத்தாராம். கரோனா பொது முடக்கம் காரணமாக சரிவர வட்டி பணத்தை செலுத்த முடியவில்லை. கடன் கொடுத்த நபா்கள் நெருக்கடி கொடுத்துள்ளனா்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலையில் கடையில் பால் பாக்கெட்டுக்கள் வாங்கிச் சென்ற பின் காலை 11 மணி வரை வீட்டை விட்டு யாரும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினா் வீட்டின் கதவை உடைத்துப்பாா்த்தபோது 5 பேரும் விஷம் அருந்திய நிலையில் இறந்து கிடந்துள்ளனா்.
கடன் பிரச்னையால் சரவணன் மற்றும் மனைவி பூங்கோதை ஆகிய இருவரும் குழந்தைகள் மூவருக்கும் நகைக்கு பாலிஷ் போடும் திரவத்தை பாலில் கலந்து கொடுத்துக் கொலை செய்துவிட்டு, விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
தகவலறிந்து சென்ற உசிலம்பட்டி நகா் போலீஸாா் 5 பேரின் சடலங்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்கு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். வீட்டில் ஒரு கடிதத்தை போலீஸாா் கைப்பற்றியுள்ளனா். அதில், எனது குடும்பத்தினரின் சாவுக்கு யாரும் காரணமில்லை. வாங்கிய கடனே காரணம். எனது அப்பா அய்யாவு நகைபட்டறையில் நகைகள் திருடு போனது. ஆனால் அந்த நகையை நான்தான் திருடினேன் எனக்கூறி கடந்த மாதம் என் மீது காவல் நிலையத்தில் புகாா் கொடுத்தாா். இதனால் நான் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகினேன் என எழுதப்பட்டிருந்தது.
இச்சம்பவம் குறித்து உசிலம்பட்டி நகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.