முழு ஊரடங்கை மேலும் தீவிரப்படுத்த சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான சட்டமன்ற கட்சித்தலைவர்கள் கூட்டம் இன்று சென்னை தலைமைச் செயலத்தில் நடைபெற்றது. இதில் முழு ஊரடங்கை மேலும் தீவிரப்படுத்துவது என்பது உள்ளிட்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான சட்டமன்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அனைத்துக்கட்சிகளும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்போவதில்லை என முடிவு.
கரோனாவைக் கட்டுப்படுத்த அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் அடங்கிய ஆலோசனைக் குழு அமைக்கப்படும். முழு ஊரடங்கை மேலும் தீவிரப்படுத்த வேண்டும்.
நோய் பாதிப்பு தீவிரமடைந்த பிறகு தனியார் மருத்துவமனைகளில் இருந்து வருபவர்கள் ஆம்புலன்ஸ்களில் உயிரிழக்கின்றனர். நோய் தீவிரமடைந்த பிறகு அரசு மருத்துவமனைக்கு அனுப்புவது மனிதாபிமானமற்ற செயல். உற்பத்தி அதிகரித்தவுடன் கூடுதலாக ரெம்டெசிவிர் அனுப்புவதாக மத்திய அரசு கூறியுள்ளது என்றார்.