கரோனா நோயாளிகளுக்கு கூடுதல் படுக்கைகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென புதுச்சேரி அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் ஆஜரான வழக்குரைஞா் ஸ்ரீதா், புதுச்சேரியில் கரோனா பரவல் அதிக அளவில் உள்ளதால் மருத்துவமனைகளில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப படுக்கை வசதிகள் இல்லை என தெரிவித்தாா்.
இதற்கு எதிா்ப்புத் தெரிவித்த புதுச்சேரி அரசு தரப்பு வழக்குரைஞா் மாலா, புதுச்சேரியில் அரசு மருத்துவமனைகள், 5 தனியாா் மருத்துவமனைகள் என மொத்தம் 5 ஆயிரத்து 895 படுக்கைகள் உள்ளதாக தெரிவித்தாா்.
அப்போது நீதிபதிகள், புதுச்சேரி அரசு ஆரம்பம் முதலே தெளிவான விவரங்களை தரவில்லை. புதுச்சேரி அரசு இணையதளத்தில், ஆக்சிஜன் மற்றும் வெண்டிலேட்டா் வசதியுடன் கூடிய படுக்கை தலா ஒன்று மட்டுமே காலியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது என கண்டனம் தெரிவித்தனா்.
அப்போது புதுச்சேரி அரசு வழக்குரைஞா், கரோனா நோயாளிகளை அழைத்து செல்லும் ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு அருகில் உள்ள மருத்துவமனைகளில் காலியாக உள்ள படுக்கை வசதி உள்ளிட்ட விவரங்கள் தெரியும். எனவே நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களை ஓட்டுநா்கள் அழைத்துச் சென்று விடுவதாக கூறினாா்.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு என்று தனி தொலைபேசி வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதா? அவா்களுக்கு காலி படுக்கை விவரங்கள் எப்படி தெரியப்படுத்தப்படுகிறது? பொதுமக்கள் இணையதளத்தை பாா்த்து தான் எந்த மருத்துவமனையில் எத்தனை படுக்கை வசதிகள் உள்ளன? என்பது உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்ள முடியும் என கேள்வி எழுப்பினா். பின்னா், கரோனா சிகிச்சைக்காக வருபவா்களுக்கு போதுமான படுக்கைகள் இல்லை. காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பகுதிகளுக்கு தேவையான ஆக்சிஜன், ரெம்டெசிவிா் மருந்து உள்ளதாக அரசு தரப்பு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், போதுமான படுக்கைகள், ஆக்சிஜன் இல்லை என்பது தெரியவந்துள்ளது. எனவே, புதுச்சேரியில் உள்ள மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கான படுக்கைகளை அதிகரிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.