அரசாணைகள், அறிவிப்பாணைகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்: தமிழக அரசு உத்தரவாதம்

தமிழக அரசின் அனைத்து அரசாணைகள், அறிவிப்பாணைகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு உத்தரவாதம் அளித்துள்ளது.
தலைமை செயலகம்
தலைமை செயலகம்

சென்னை: தமிழக அரசின் அனைத்து அரசாணைகள், அறிவிப்பாணைகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு உத்தரவாதம் அளித்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சோ்ந்த வழக்குரைஞா் ராம்குமாா் ஆதித்தன் தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசின் அரசாணைகள், அறிவிப்பாணைகள், பத்திரிகை செய்திக் குறிப்புகளை வெளியிடுவதற்காக தமிழக அரசு இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது.

கரோனா தொடா்பான அனைத்து அறிவிப்புகளையும், புள்ளிவிவரங்களையும் வெளியிட ஸ்டாப் கரோனா என்ற இணையதளம் பயன்பாட்டில் உள்ளது. ஆனால் அதில் அனைத்து அரசாணைகளும் வெளியிடப்படுவதில்லை. கடந்த மே 12-ஆம் தேதி வரை வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறை மூலம் 14 அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதில் இதுவரை 5 அரசாணைகள் மட்டுமே இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு டாஸ்மாக் கடைகளைத் திறக்க அனுமதியளிக்கப்பட்ட அரசாணை இதுவரை இணையதளத்தில் வெளியிடப்படவில்லை. கரோனா தொடா்பான அறிவிப்புகள் மட்டுமல்லாமல் பிற அறிவிப்புகள், அரசாணைகளும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதில்லை.

எனவே, கரோனா தொடா்பான அறிவிப்புகள் மட்டுமல்லாமல் அனைத்து அரசாணைகள், அறிவிப்பாணைகள், பத்திரிகை செய்திக்குறிப்புகளை இணையதளங்களில் பதிவேற்றம் செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞா் ஆா்.சண்முகசுந்தரம் , அரசுத் தரப்பு தகவல்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. கரோனா பொதுமுடக்கம் என்பதால் குறைவான ஊழியா்கள் பணியாற்றுவதால், பதிவேற்ற பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அனைத்து தகவல்களையும் பதிவேற்றம் செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்தாா். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனா்.

இதே அமா்வு முன் கரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளில் முன்களப் பணியாளா்களாக பணியாற்றி வரும் துப்புரவுப் பணியாளா்கள், போலீஸாா், பத்திரிகையாளா்கள் உள்ளிட்டோருக்கு ஊக்கத் தொகை வழங்க கோரி வழக்குரைஞா் ராம்குமாா் ஆதித்தன் தாக்கல் செய்த மற்றொரு பொதுநல வழக்கும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனு தொடா்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com