சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் லிட்டருக்கு 22 காசுகளும், டீசல் 28 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பெட்ரோல் விலை ரூ.95 -ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 2017 -ஆம் ஆண்டு ஜூன் 17 முதல் சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் மாற்றியமைத்து விற்பனை செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி, பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் விநியோக நிறுவனங்கள் நாள்தோறும் எரிபொருள்களின் விலையை நிர்ணயிக்கின்றன. அதன்படி, காலை 6 மணி முதல் புதிய விற்பனை விலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 22 காசுகள் அதிகரிக்கப்பட்டு பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.95.28 ஆகவும், டீசல் லிட்டருக்கு 28 காசுகள் அதிகரிக்கப்பட்டு டீசல் ஒரு லிட்டர் ரூ.89.39 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனையாகி வருகிறது.
தலைநகர் தில்லியில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.93.68ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.84.61ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதுபோன்று மும்பையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.99.94 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.91.87 ஆகவும், கொல்கத்தாவில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.93.72 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.87.46 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
நடப்பு மாதத்தில் மட்டும் பெட்ரோல் விலை ரூ.2.63, டீசல் ரூ.3.39 -ம் உயர்த்தப்பட்டுள்ளது.
கரோனா தொற்று காலத்தில் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருவது வாகன ஓட்டிகள், வணிகர்கள், மக்களை மேலும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
பெட்ரோல், டீசல் உற்பத்தி விலை அதற்கு விதிக்கப்படும் விலையில் மூன்றில் ஒரு பங்குதான் என்றும், மீதம் இருப்பது மத்திய , மாநில அரசுகளின் வரிகளே என்று கூறப்படுகிறது. இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் வரிகளை குறைக்க முன் வரவேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.