நியாயவிலைக் கடைகளில் அரிசி அட்டைதாரர்களுக்கு ஜூன் மாதம் முதல் 13 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா இரண்டாவது அலையின் தீவிரம் காரணமாக தொற்று பரவல் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மே 24ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை தளர்வற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இந்த முழு ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டித்து இன்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதனிடையே தளர்வுகளற்ற ஊரடங்கை கருத்தில்கொண்டு நியாயவிலைக் கடைகளில் அரிசி அட்டைதாரர்களுக்கு ஜூன் மாதம் முதல் 13 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதன்படி பொது மக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில், 13 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம், வரும் ஜூன் மாதம் முதல் வழங்கிட, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.