ஜிஎஸ்டி கட்டமைப்பை மாற்றாவிட்டால் கடும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, தமிழகத்திற்கு ரூ12,000 கோடிக்கு மேல் ஜிஎஸ்டி நிலுவைத்தொகை மத்திய அரசிடமிருந்து வரவேண்டியுள்ளது. முதல்வர் வழிகாட்டுதலில் சில கருத்துகளை ஜிஎஸ்டி கூட்டத்தில் எடுத்துரைத்தேன். மாநில அரசுகளிடம் வரிப் பணத்தை பெற்று அதையே மத்திய அரசு திரும்பத் தருகிறது.
தமிழகம் போன்ற பெரிய மாநிலங்கள் அதிகளவில் வரிப்பணத்தை விட்டுத் தருகின்றன. அதிக வரி செலுத்தும் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு முறையாக இல்லை. ஜிஎஸ்டி கட்டமைப்பை மாற்றாவிட்டால் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதிக உற்பத்தி, அதிக நுகர்வு அடிப்படையில் நிதி ஒதுக்கீடு இருக்க வேண்டும். மக்கள்தொகை அடிப்படையில் ஜிஎஸ்டி கவுன்சிலில் வாக்கு அளிக்கப்பட வேண்டும்.
ஜிஎஸ்டி கவுன்சிலில் ஒரு மாநிலத்திற்கு ஒரு வாக்கு என்ற நடைமுறை ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. ஜிஎஸ்டி கட்டமைப்பே சரியில்லை எனக் கூறுகிறோம். இதில் பெட்ரோலை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவருவது சாத்தியமில்லை. கரோனா சிகிச்சை பொருள்களுக்கு சில மாதங்களுக்கு வரி விலக்கு அளிக்கக் கோரிக்கை வைத்தேன். இவ்வாறு அவர் கூறினார்.