கம்பம்: முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை தேவையில்லை என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
முல்லைப் பெரியாறு அணை பகுதிகளை பார்வையிட்ட நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறும்போது முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது, புதிய அணை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்தார்.
முல்லைப் பெரியாறு அணையை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெள்ளிக்கிழமை பார்வையிட்டார்.
பிரதான அணை, பேபி அணை, மண்ணை, கேரள மாநிலத்திற்கு உபரி நீர் செல்லும் மதகு பகுதிகளை பார்வையிட்டார். பின்னர் தேக்கடியில் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, முல்லைப் பெரியாறு அணை உச்சநீதிமன்ற உத்தரவுபடி, பல்வேறு தொழில்நுட்ப குழுவினர் பார்வையிட்டு அணை பலமாக உள்ளதாக கூறியுள்ளனர். எனவே முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட தேவையில்லை.
கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆட்சிகாலத்திலேயே தீர்வு காண அத்தனை நடவடிக்கைகள் எடுக்கப்படும். விரைவில் தமிழக பொதுப்பணித்துறை சார்பில் விரைவு படகுகள் இயக்கப்படும். அணையிலிருந்து தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறக்க பணிகள் மேற்கொள்ள ஆய்வு செய்யப்படும்.
கடந்த 10 ஆண்டுகளாக, அணையை பார்வையிடாத ஓ.பி.எஸ், இ.பி.எஸ். இருவருக்கும், தற்போது அணைக்காக, உண்ணாவிரதம் இருக்கத் தகுதி இல்லை என்றார்.
அணையை கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி, உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, காவேரி தொழில்நுட்ப குழுமம் தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீதரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே, சட்டமன்ற உறுப்பினர்கள் என். ராமகிருஷ்ணன், ஆ. மகாராஜன், கே.எஸ்.சரவணக்குமார், கோ. தளபதி, வெங்கடேசன் கலந்து கொண்டனர்.