தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரியகோயிலில் நவம்பர் 13 ஆம் தேதி நடைபெறவுள்ள 1036-ஆவது சதய விழாவையொட்டி, திங்கள்கிழமை காலை பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பார் போற்றும் புகழுடைய தஞ்சாவூர் பெரியகோயிலைக் கட்டித் தமிழகத்துக்குப் பெருமை சேர்த்த மாமன்னன் ராசராச சோழனின் பிறந்த நாளை அவர் பிறந்த விண்மீனாகிய ஐப்பசி சதய நாளன்று சதய விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன்படி, மாமன்னன் ராஜராஜசோழனின் 1036-ஆவது சதய விழா நவம்பர் 13 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. வழக்கமாக இரு நாட்கள் நடைபெறும் இவ்விழா, கரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டைப் போல நிகழாண்டும் ஒரு நாள் மட்டுமே நடத்தப்படவுள்ளது.
இதையொட்டி பெரிய கோயிலில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை காலை நடைபெற்றது. இதில் சதய விழாக் குழுத் தலைவர் து. செல்வம், துணைத் தலைவர் சி. மேத்தா, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் சி. பாபாஜி ராஜா போன்ஸ்லே, உதவி ஆணையர் ச. கிருஷ்ணன், கோயில் செயல் அலுவலர் எஸ். மாதவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சத்ய விழாவில் நவம்பர் 13-ஆம் தேதி காலை 7 மணிக்கு பெரியகோயிலுக்கு வெளியே உள்ள மாமன்னர் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்தல், 9 மணிக்கு பெருவுடையாருக்கு 36 வகை பொருள்களால் பேரபிஷேகம், பிற்பகல் 1 மணிக்கு பெருந் தீப வழிபாடு, மாலை 6 மணிக்கு கோயில் பிரகாரத்துக்குள் சுவாமி உலா வருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.