வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலில் புதன்கிழமை அதிகாலை நடந்த கார் விபத்தில் நிதி நிறுவன உரிமையாளர் மனைவி உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் பகுதி பெரிய திருமங்கலத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் கவுண்டர் (52). இவருடைய மனைவி கோகிலாம்பாள் (44). சக்திவேல் கோயமுத்தூரில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். கோகிலாம்பாளின் தந்தை வீடு வெள்ளக்கோவில் நடேசன் நகரில் உள்ளது.
இதையும் படிக்க | இந்தியாவின் கரோனா தடுப்பூசி சான்றிதழ்களுக்கு 96 நாடுகள் ஒப்புதல்
கணவன் மனைவி இருவரும் நடேசன் நகரிலிருந்து காரில் புறப்பட்டு வள்ளியிரச்சல் பக்கமுள்ள வயல்காளிபாளையத்துக்கு உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது வெள்ளக்கோவில் கடைவீதி நான்கு சாலைச் சந்திப்பில் திரும்பிய போது, எதிரே கோயமுத்தூரில் இருந்து குளித்தலைக்குச் சென்று கொண்டிருந்த சொகுசு கார் மோதியது.
இதில், காரின் முன்புற இருக்கையில் அமர்ந்திருந்த கோகிலாம்பாள் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
காரை ஓட்டி வந்த சக்திவேல் லேசான காயத்துடன் காங்கயம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சொகுசு காரில் வந்தவர்கள் காயமின்றி தப்பினர்.
இதையும் படிக்க | வேலையில் இருந்து நீக்கிய முதலாளியின் மனைவியைக் கொன்ற இளைஞா் கைது
கோகிலாம்பாள் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக காங்கயம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.