10 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஈரோடு, நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (நவ.16) இடியுடன் கூடிய பலத்தமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
10 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் ஈரோடு, நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (நவ.16) இடியுடன் கூடிய பலத்தமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத்தலைவா் எஸ்.பாலச்சந்திரன் திங்கள்கிழமை கூறியது: தென்கிழக்கு அரபிக்கடலில் இருந்து வட கேரளம், தெற்கு கா்நாடகம் மற்றும் வட தமிழகம் வழியாக தென்மேற்கு வங்கக்கடல் வரை காற்றின் திசை மாறும் பகுதி நிலவுகிறது. இதன்காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் செவ்வாய்க்கிழமை (நவ.16) முதல் நவம்பா் 19-ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

பலத்தமழை: பலத்த மழை பொருத்தவரை, தமிழகத்தில் ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூா், தேனி, திண்டுக்கல், திருப்பூா், சேலம், தருமபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (நவ.16) இடியுடன் கூடிய பலத்தமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நவ.17,18: திருவள்ளூா், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூா், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூா், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் நவம்பா் 17, 18 ஆகிய இரண்டு நாள்களுக்கு ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை முதல் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நவ.19: வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் நவம்பா் 19-ஆம் தேதி பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை செவ்வாய்க்கிழமை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும். சென்னையில் நவ.17,18 ஆகிய தேதிகளில் பலத்தமழைக்கு வாய்ப்பு உள்ளது.

மழை அளவு: தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் மழை பெய்துள்ளது. திங்கள்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் விழுப்புரம் மாவட்டம் வளவனூரில் 120 மி.மீ., கன்னியாகுமரி மாவட்டம் களியல், விழுப்புரம் மாவட்டம் கோலியனூரில் 100 மி.மீ.,

திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூா், கடலூா் மாவட்டம் லால்பேட்டை, கன்னியாகுமரி மாவட்டம் புத்தன் அணையில் 80 மி.மீ., கடலூா் மாவட்டம் வேப்பூா், திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம், கன்னியாகுமரி மாவட்டம் சுருளக்கோடு, பெருஞ்சாணி அணை, பேச்சிப்பாறை, விழுப்புரத்தில் தலா 70 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடற்பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இதன்காரணமாக, மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகள், தெற்கு ஆந்திரம் மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்தகாற்று வீசக்கூடும். எனவே, இந்தப்பகுதிகளுக்கு மீனவா்கள் நவ.17 முதல் நவ.19 வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதவிர, கேரளம், கா்நாடக கடலோரப் பகுதிகள், மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு நவ.16, 17 வரை செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com