கம்பம்: தேனி மாவட்டம், கம்பத்திலிருந்து கேரளத்துக்கு ரேசன் அரிசியை கடத்தி சென்ற பிக் அப் வேனை சினிமா பட சம்பவம் போல், விரட்டி பிடித்த போலீசார், 4 டன் அரிசி மற்றும் பிக் அப் வேனை சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
தேனி மாவட்டம், கம்பத்திலிருந்து கேரளத்துக்கு ரேசன் அரிசி கடத்திச் செல்லப்படுவதாக வடக்கு காவல் நிலைய போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
ரகசியத் தகவலின் பேரில் சனிக்கிழமை காலை நெடுஞ்சாலை ரோந்து போலீசார் வாகனம் கம்பம் மெட்டு சாலையில் ஏற முடியாமல் ஏறிச் சென்றது,
அப்போது போலீஸ் வாகனத்தை பார்த்ததும் கேரளம் மாநிலம், கம்பமெட்டை நோக்கிச் சென்ற பிக்கப் வேன், மீண்டும் கம்பத்தை நோக்கி திரும்பிய நிலையில், புறவழிச்சாலையில் தயாராக இருந்த தனிப்பிரிவு காவலர் மணிவண்ணன் பின்னால் விரட்டிச் சென்று மடக்கி, வடக்கு போலீசாரிடம் ஒப்படைத்தார்.
விசாரணையில் பிக் அப் வாகன ஓட்டுநர் கம்பம் சுப்பிரமணியசாமி கோவில் தெருவைச் சேர்ந்த ராஜா (38) என்றும், இவர் ஏற்கனவே இதேபோல் அரிசி கடத்தி போலீசாரை தாக்கிவிட்டு தப்பிச் சென்றவர் என்றும், பிக் அப் வேன் மற்றும் ரேஷன் அரிசி, தவமணி (60) என்பவருக்கு சொந்தமானது என்று தெரிய வந்தது.
இதுசம்மந்தமாக வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, 2 பேரை கைது செய்து, 4 ஆயிரம் கிலோ ரேசன் அரிசியை கைப்பற்றி, பிக் அப் வேனை பறிமுதல் செய்தனர்.