காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் மாமுல் கேட்டு உரிமையாளரை மிரட்டி கடையை சேதப்படுத்தியதாக 4 ரௌடிகளை காவல்துறையினர் சனிக்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் நகரில் சாலைத் தெருவில் உள்ள சூப்பர் மார்க்கெட் கடையை இம்மாதம் 17 ஆம் தேதி புதன்கிழமை 4 பேர் திடீரென புகுந்து அக்கடையை அடித்து உடைத்து பொருட்களை சேதப்படுத்தினர். கடையின் உரிமையாளரிடமும் மாமுல் கேட்டு மிரட்டினார்கள்.
இதுதொடர்பாக சிவகாஞ்சி காவல்நிலையத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டிருந்தது. இவர்களைப் பிடிக்க காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி.எம்.சத்யபிரியா உத்தரவின் பேரில் எஸ்.பி.எம்.சுதாகர் 4 தனிப்படைகளை அமைத்தார்.
தனிப்படையினரின் தீவிர தேடுதல் வேட்டையில் காஞ்சிபுரம் அருகே சிறுவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர்களான ஜெமினி என்ற மணிகண்டன்(24), ஜெகன்(29), வையாவூரைச் சேர்ந்த அருண் என்ற அட்டு அருண்(21), தேனம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பிரசாந்த்(24) ஆகிய 4 பேரையும் தனிப்படையினர் கைது செய்தனர். இவர்கள் 4 பேர் மீதும் பல்வேறு குற்ற வழக்குகளும் இருந்து வருவதாகவும் பிரபல ரௌடி ஒருவரின் நண்பர்கள் எனவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.