சேலம்: மகாளய அமாவாசையையொட்டி இன்று மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக சேலத்தில் சிவன் ஆலயங்களில் ஏராளமானோர் குவிந்ததால் கரோனா பாதுகாப்பு விதிகள் கேள்விக்குறியானது.
மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுக்க ஆடி அமாவாசை, தை அமாவாசை மற்றும் மகாளய அமாவாசை சிறப்பான நாளாகும். அதிலும் குறிப்பாக மகாளய அமாவாசை தினம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மகாளய அமாவாசை தினத்தன்று மறைந்த நமது முன்னோர்கள் நமது நலன்கள் பெறுக ஆசிர்வதிக்கும் சக்தியை கொண்டவர்களாக இருப்பார்கள்.
மகாளய அமாவாசை தினத்தன்று பித்ரு தர்ப்பணம் கொடுப்பவர்கள் காலையிலேயே ஆற்றங்கரை, குளக்கரைகளில் வேதியர்களை கொண்டு பித்ரு தர்ப்பணம் கொடுப்பர். அதேபோல் சிவன் கோவில்களிலும் பித்ரு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.
அந்தவகையில் சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் இன்றைய தினம் பித்ரு தர்ப்பணம் கொடுப்பதற்காக ஏராளமானோர் குவிந்திருந்தனர். ஆண் வாரிசுகள் இல்லாத பட்சத்தில் மறைந்தவர்கள் வம்சாவளியை சார்ந்த பெண்கள் சிராத்தம் கொடுக்க வேண்டும் என்பதால் பெண்களும் ஏராளமானோர் வந்திருந்தனர்.
கரோனா காலகட்டமாக இருப்பதால் கூட்டங்களை தவிர்க்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், சுகவனேஸ்வரர் கோயிலில் கூட்டத்தை கட்டுப்படுத்த போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை.
அதேபோல் பக்தர்களில் பலர் முகக்கவசம் அணியாமலும் இருந்தது, கரோனா தடுப்பு விதிகளை கேள்விக்குறியாக்கி உள்ளது.