ராணிப்பேட்டை சிப்காட் அரசு பள்ளி வாக்குச்சாவடி மைய வளாகத்தில் திமுக-அதிமுகவினர் இடையே வாக்குவதம் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.
வாலாஜா ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட சிப்காட் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி எண் 92 இல் வாக்குச்சாவடி மையத்தில் ஜன்னல் வழியாக தேர்தலில் போட்டியிடும் ஒரு தரப்பினர் வாக்கு செலுத்த வந்த வாக்காளர்களிடம் ஜன்னல் வழியாக வாக்கு செலுத்துமாறு கேட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக திமுக மற்றும் அதிமுகவினர் இடையே வாக்குச்சாவடி மைய வளாகத்தில் வாக்குவாதம் ஏற்பட்டு ஒரு கட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் வாக்குச்சாவடி வளாகம் வெளியே அனுப்பி வைத்தனர்.
அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தீபா சத்யன் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலரான தெ.பாஸ்கர பாண்டியன் ஆகியோர் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்தை நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.