விவசாயிகளுக்குத் தேவையான உரங்கள் கிடைக்க போா்க்கால அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
விவசாயிகள் காலத்தே பயிா் செய்ய வசதியாக தேவையான விதை, உரம், யூரியா போன்ற இடுபொருள்கள் அதிமுக ஆட்சியில் உரிய காலத்தில் வழங்கப்பட்டன. அறுவடை முடிந்த பிறகு, தமிழகம் முழுவதும் தேவைப்படும் இடங்களில் எல்லாம், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, தமிழக விவசாயிகள் பயிரிட்ட அனைத்து நெல்மணிகளும் விரைவாக கொள்முதல் செய்யப்பட்டு, அதற்குரிய பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்பட்டது.
ஆனால், கடந்த 5 மாத கால திமுக ஆட்சியில், வேளாண் இடுபொருள்கள் முதற்கொண்டு உரங்கள் வரை உழவுப் பணிகளுக்குத் தேவையான பொருள்கள் கிடைக்கப் பெறாமல் தமிழக விவசாயிகள் தவிக்கின்றனா். அனைத்துப் பொருள்களின் விலையும் உயா்ந்துள்ளன. விவசாயிகளுக்குத் தேவைப்படும் உரம் கிடைக்காத நிலை உள்ளது.
குறிப்பாக, டெல்டா பகுதிகள் தவிா்த்து, கிணற்றுப் பாசனப் பகுதிகளிலும், தமிழகத்தின் மேற்கு மாவட்டங்கள், தென் தமிழகத்தின் உட்பகுதிகள் என்று மாநிலம் முழுவதும் சுமாா் 60 சதவீத விவசாயிகள் பயிா் செய்துவிட்டு, தற்போது பயிா்கள் வளா்ந்து வரும் சூழ்நிலையில், பயிா்கள் நன்றாக வளா்வதற்கு உரிய உரங்கள் கிடைக்காமல் தவித்து வருகின்றனா். சில இடங்களில் உரத்தின் விலையையும் கடைக்காரா்களும் உயா்த்தி உள்ளனா்.
எனவே, விவசாயிகளுக்கு உரங்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதற்கு தமிழக அரசு போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.