குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கொடியேற்றம்

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா புதன்கிழமை (அக். 6) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கொடியேற்றம்

உடன்குடி: தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா புதன்கிழமை (அக். 6) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டுதல், காளி பூஜை நடைபெற்றது. புதன்கிழமை காலை 8.45 மணிக்கு யாகசாலை பூஜைகளை தொடர்ந்து,  அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் உள்பிரகாரத்தில் வலம் வருதல் நடைபெற்றது. 
9.42 மணிக்கு குமார் பட்டர் தலைமையில் கொடியேற்றம் நடைபெற்றது. பின் கொடிமரத்துக்கு பால், பன்னீர், பழம்,விபூதி, சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. பின்னர் கொடிமரத்துக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில், திருச்செந்தூர் ஏஎஸ்பி ஹர்ஷ்சிங், கோட்டாட்சியர் கோகிலா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கரோனா பொதுமுடக்கம் அமலில் உள்ளதால் கொடியேற்ற நிகழ்வில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்படவில்லை. இரவு 8 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் துர்க்கை திருக்கோலத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
குலசேகரன்பட்டினத்தில் கோயிலுக்கு வரும் அனைத்து சாலைகள், தெருக்கள், கடற்கரை செல்லும் வழி உள்ளிட்ட முக்கிய இடங்களில் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டிருந்தன.
கோயில் பிரகாரத்தைச் சுற்றிலும் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. பக்தர்கள், தசரா குழுக்களுக்கு காப்பு கயிறுகள் வியாழக்கிழமை (அக். 7) கோயில் நிர்வாகம் பக்தர்களுக்கு விநியோகம் செய்யும். பக்தர்கள் தங்கள் ஊர்களில் உள்ள கோயில்களில் காப்பு அணிந்து பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனுக்கு காணிக்கை வசூலிப்பார்கள். விழா நாள்களில் இரவு 8 மணிக்கு அம்மன் பல்வேறு வாகனங்களில் பல்வேறு திருக்கோலங்களில் எழுந்தருளி அருள்பாலிப்பார். அக். 15-ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு மேல் அம்மன் சிம்ம வாகனத்தில் கோயில் முன்பாக எழுந்தருளி மகிசாசூரனை சம்ஹாரம் செய்கிறார்.
அக்.16- ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு உற்சவமூர்த்தி, அம்மன் அபிஷேக ஆராதனைக்கு எழுந்தருளல், 6 மணிக்கு அபிஷேக ஆராதனை, மாலை 5 மணிக்கு அம்மன் மண்டபத்தில் இருந்து கோயிலை வந்தடைந்தவுடன் காப்பு களைதல் நடைபெறும். 
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக வேடமணிந்த பக்தர்கள் கோயிலுக்கு வராமல் தங்கள் ஊர்களில் உள்ள கோயில்களிலேயே காப்பு களைந்து விரதத்தை நிறைவு செய்ய வேண்டும் என கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்.17-ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு அம்மன், சுவாமிக்கு பாலாபிஷேகம், தீபாராதனை நடைபெறும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com