சீர்காழி: சீர்காழி அருகே மீனவ கிராம தலைவர் தேர்வு செய்யும் நிகழ்ச்சியில் இருவேறு கருத்துக்களால் பழையாறில் ஒரு தரப்பு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சீர்காழி அருகே பழையாறில் இயற்கை மீன்பிடித் துறைமுகம் அமைந்துள்ளது. இந்த மீன்பிடித் துறைமுகம் மூலம் 300 விசைப்படகுகள், 350 பைபர் படகுகள், 200 நாட்டு மரங்கள் கொண்டு சுமார் 6 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். நாளொன்றுக்கு பல கோடிக்கு மீன்வர்த்தகம் ஏற்றுமதி மூலம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பழையார் மீனவ கிராம தலைவர் தேர்வு செய்யும் நிகழ்ச்சி நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது மீனவர்களில் ஒரு பகுதியினர் பழையார் மீனவ கிராமம், பூம்புகார் மீனவ கிராமத்தினை தலைமையாகக் கொண்டு செயல்பட வேண்டும் என கருத்து தெரிவித்தனர். இதற்கு மற்றொரு தரப்பினர் பூம்புகாரை தலைமையாக ஏற்று செயல்படுவதை விட பழையாறையே தலைமையாக கொண்டு தனியாக செயல்படலாம் என கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பு மீனவர்களின் கருத்துக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், இன்று வெள்ளிக்கிழமை பூம்புகாரை தலைமையாக ஏற்று செயல்பட வேண்டும் என்று கூறிய சுமார் 84 விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. அவர்களது விசைப்படகுகள் பழையார் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவங்களால் பழையார் துறைமுகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து புதுபட்டினம் காவல் ஆய்வாளர் சந்திரா தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.