ஓமலூர் ஊரக உள்ளாட்சி தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு!
சேலம் மாவட்டம், ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு காலை முதலே மிகுந்த விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.
சேலம் மாவட்ட ஊராட்சி குழு 10 ஆவது வார்டு சிக்கனம்பட்டி, புளியம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று சனிக்கிழமை நடைபெற்று வருகிறது.
ஊரக உள்ளாட்சி தேர்தலை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள 82 வாக்குச்சாவடிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வேலகவுண்டனூர் வாக்குச்சாவடியில் திமுக மாவட்ட ஊராட்சி குழு வேட்பாளர் சண்முகம் முதல் நபராக வந்து தனது வாக்கினை பதிவு செய்தார்.
இதேபோன்று அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் இளைஞர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்களுக்கு சனிடைசர் வழங்கப்பட்டு முகக்கவசம் மற்றும் கையுறைகள் வழங்கப்பட்டன. அவர்களின் உடல் வெப்ப நிலையை பரிசோதித்த பின்னரே வாக்குச்சாவடிகள் அனுமதிக்கப்பட்டனர்.
ஊரக உள்ளாட்சி தேர்தல் என்பதால் வாக்குச்சீட்டு முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
மாவட்ட ஊராட்சி குழு அதிமுக வேட்பாளர் எம். ஆர். முருகன் பெரமச்சூர் பகுதியில் நடைபெற்ற வாக்குப்பதிவை பார்வையிட்டார். ஓமலூர் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் மணி தனது சொந்த ஊரான பெரியேரிப்பட்டி ஊராட்சியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
ஊரக உள்ளாட்சி தேர்தலை ஒட்டி ஓமலூர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் தாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.