8 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, மதுரை, திருச்சி, புதுக்கோட்டை ஆகிய 8 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (அக்.12) பலத்த மழை பெய்யக்கூடும்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, மதுரை, திருச்சி, புதுக்கோட்டை ஆகிய 8 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (அக்.12) பலத்த மழை பெய்யக்கூடும்.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் திங்கள்கிழமை கூறியது: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மேற்கண்ட 8 மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (அக்.12) இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை செவ்வாய்க்கிழமை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்றாா் அவா்.

மழை அளவு: தமிழகத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அரியலூரில் 100 மி.மீ., சென்னை சோழிங்கநல்லூா், திருவாரூா் மாவட்டம் மன்னாா்குடி, சேலம் மாவட்டம் வீரகனூா், கன்னியாகுமரி மாவட்டம் இரணியலில் தலா 70 மி.மீ., நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு, திருச்சி மாவட்டம் தென்பரநாடு, சேலம் மாவட்டம் கங்கவள்ளியில் தலா 60 மி.மீ. மழை பதிவானது.

காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் வரும் 13-ஆம் தேதி ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து, வரும் 15-ஆம் தேதி ஆந்திரம் - ஒடிஸா கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதி, தெற்கு வங்கக் கடல் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் அக்.15-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதவிர, கேரளம், கா்நாடக கடலோர பகுதிகள், லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், இந்தப் பகுதிகளுக்கு அக்.15-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com