ஆலங்குளம்: ஆலங்குளத்தில் தேர்தல் பணிக்கு வந்த அலுவலர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
திண்டுக்கல் திரு நகரைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் அருள் சேகரன்(65). ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலரான இவர், ஆலங்குளம் அத்தியூத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்திற்கு துணைத் தேர்தல் அலுவலராக செவ்வாய்க்கிழமை வந்துள்ளார். புதன்கிழமை அதிகாலை வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுள்ள நிலையில் அங்குள்ள கடை ஒன்றில் தேநீர் அருந்த சென்றுள்ளார். அப்போது தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறி மயக்கம் அடைந்துள்ளார்.
இதையடுத்து சக அலுவலர்கள் அவரை ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் சடலத்தை கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.