தமிழகத்தில் மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு முதல் முறையாக நடைபெற்ற கலந்தாய்வில் 123 பேருக்கு இடமாறுதல் வழங்கப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வித்துறை வருவாய் மாவட்டம், கல்வி மாவட்டம், வட்டாரப்பகுதி என 3 பிரிவுகளாக செயல்பட்டு வருகின்றன. அதன்படி நிா்வாக வசதிக்காக 38 வருவாய் மாவட்டங்கள் 120 கல்வி மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. கல்வி மாவட்டங்களின் தலைமை அதிகாரியாக மாவட்டக்கல்வி அலுவலா்கள் செயல்படுவா்.
இதற்கிடையே அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கு அவா்கள் சுயவிருப்பத்தின் பேரில் மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. அதேபோல், மாவட்டக்கல்வி அலுவலா்களுக்கும் பணிமூப்பு அடிப்படையில் இடமாறுதல் கலந்தாய்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்தது.
அதன்படி சொந்த மாவட்டம் மற்றும் ஒரே இடத்தில் 2 ஆண்டுகள் பணிபுரிந்தவா்கள் அதற்கு மாறுதல் கோர இயலாது என்பன உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில் மாவட்டக் கல்வி அலுவலா் மற்றும் அதையொத்த பணியிடங்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை மாலை 5 முதல் 7 மணி வரை இணையவழியில் நடைபெற்றது.
அனைத்துப் பணியிடங்களும் காலிப் பணியிடமாக கருதப்பட்டு நடத்தப்பட்ட இந்த கலந்தாய்வில் கலந்துகொண்ட மொத்தம் 123 அதிகாரிகளுக்கும் இடமாறுதல் வழங்கப்பட்டது. மேலும், 3 மாவட்டக் கல்வி அதிகாரி காலிப் பணியிடங்களும் விரைவில் நிரப்பப்பட உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனா். பள்ளிக்கல்வித் துறை வரலாற்றில் முதல்முறையாக மாவட்டக்கல்வி அதிகாரிகளுக்கு கலந்தாய்வு மூலம் பணியிடமாறுதல் வழங்கப்பட்டது குறிப்பிடத்தகக்து.