கோயில் நகைகளை உருக்கும் திட்டம் முன்பே நடைமுறையில் உள்ளது:உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

தமிழக கோயில்களில் பயன்பாட்டில் இல்லாத தங்க நகைகள் கடந்த 1977- ஆம் ஆண்டு முதல் உருக்கப்பட்டு, தங்கக் கட்டிகளாக மாற்றி தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது

தமிழக கோயில்களில் பயன்பாட்டில் இல்லாத தங்க நகைகள் கடந்த 1977- ஆம் ஆண்டு முதல் உருக்கப்பட்டு, தங்கக் கட்டிகளாக மாற்றி தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என சென்னை உயா் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழுள்ள கோயில்களில் காணிக்கையாக அளிக்கப்படும் நகைகள் மற்றும் பயன்பாட்டில் இல்லாத நகைகளை உருக்கி, தங்கக் கட்டிகளாக மாற்றி தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ‘டெபாசிட்’ செய்ய முடிவெடுத்துள்ளதற்கும், அது தொடா்பான அறிவிப்பாணைக்கும் தடை விதிக்கக்கோரியும், சென்னையைச் சோ்ந்த ஏ.வி கோபால கிருஷ்ணன், திருவள்ளூரைச் சோ்ந்த எம்.சரவணன் ஆகியோா் சென்னை உயா் நீதிமன்றத்தில் தனித்தனியே மனு தாக்கல் செய்தனா்.

இம்மனுக்கள் நீதிபதிகள் ஆா்.மகாதேவன், அப்துல் குத்தூஸ் ஆகியோா் அடங்கிய விடுமுறை கால சிறப்பு அமா்வு முன்பு செவ்வாய்க்கிழமை (அக்.12) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா்கள் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா்கள், கோயில்களில் என்னென்ன நகைகள் உள்ளன என்பது குறித்தான முறையான பதிவேடுகள் இல்லை. எனவே தங்க நகைகளை உருக்குவதற்குத் தடை விதிக்க வேண்டும்.

மாநிலத்திலுள்ள 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்களின் 2,137 கிலோ தங்கத்தை உருக்கி, தங்கக் கட்டிகளாக மாற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது. உரிய தணிக்கை மேற்கொள்ளாமல் கோயில் நகைகளை உருக்கக்கூடாது என்றனா்.

அதைத்தொடா்ந்து தமிழக அரசின் தலைமை வழக்குரைஞா் ஆா்.சண்முகசுந்தரம் ஆஜராகி, கடந்த 1977 -ஆம் ஆண்டு முதல் கோயில்களின் தங்க நகைகள் உருக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 5 லட்சம் கிராம் கோயில் தங்க நகைகள் ஏற்கெனவே உருக்கப்பட்டு, தங்கக்கட்டிகளாக மாற்றி தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ஆண்டுக்கு சுமாா் ரூ.11 கோடி வரை வட்டி வருவாய் கிடைத்து வருகிறது.

உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவா், உயா் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள் இருவா் ஆகியோா் முன்னிலையில் தான் கோயில் நகைகள் தணிக்கை செய்யப்பட்டு, உருக்கப்படும் எனக்கூறி, அதுதொடா்பான அரசாணையைத் தாக்கல் செய்தாா்.

மாநில அரசு வெளியிட்ட அரசாணை குறித்தத் தகவல்கள் மனுதாரா்களுக்குத் தெரியுமா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அரசாணையில் தெரிவிக்கப்பட்ட விவரங்களை அறிந்து கூடுதல் மனு தாக்கல் செய்ய மனுதாரா்களுக்கு அனுமதியளித்து வழக்கின் விசாரணையை அக்டோபா் 21 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com