நாகை மீனவர்கள் 23 பேர் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிப்பு

நாகையிலிருந்து 2 விசைப் படகுகளில் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்ற நாகை, மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் 23 பேர் இலங்கைக் கடற்படையினரால் புதன்கிழமை இரவு சிறைபிடிக்கப்பட்டனர். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

நாகப்பட்டினம்: நாகையிலிருந்து 2 விசைப் படகுகளில் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்ற நாகை, மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் 23 பேர் இலங்கைக் கடற்படையினரால் புதன்கிழமை இரவு சிறைபிடிக்கப்பட்டனர். 

நாகை, அக்கரைப்பேட்டை, திடீர்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் இ.சிவக்குமார்(48). இவரது சகோதரர் சிவனேசன் (42). இவர்களுக்குச் சொந்தமான இரு விசைப் படகுகளில் நாகை அக்கரைப்பேட்டை, சாமந்தான்பேட்டை, ஆர்யநாட்டுத் தெரு மற்றும் மயிலாடுதுறை மாவட்டம் சந்திரப்பாடி, தரங்கம்பாடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் 23 பேர் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர்.

கடந்த 11-ஆம் தேதி நாகை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிப்புக்குப் புறப்பட்ட அவர்கள், புதன்கிழமை இரவு இலங்கை, பருத்தித்துறைக்கு தென்கிழக்கே சுமார் 40 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்தபோது, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் 23 பேரும், வியாழக்கிழமை காலை இலங்கை, காரைநகர் துறைமுகத்துக்குக் கொண்டுச் செல்லப்பட்டனர். அங்கு, மீனவர்களுக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், அவர்கள் யாழ்ப்பாணம் மீன்வளத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, சட்ட நடவடிக்கைகளுக்கு உள்படுத்தப்படுவர் எனக் கூறப்படுகிறது.

மீட்கக் கோரிக்கை..
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள நாகை, மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் 23 பேரையும், விசைப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாகை, மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com