
தேவன் எஸ்டேட் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 4 பேரைத் தாக்கிக் கொன்ற டி23 புலியைத் தேடும் 21 ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் தொடா்கிறது. மயக்க ஊசி செலுத்தியும் புலி தப்பிச் சென்றதால் தொடர்ந்து பரபரப்பு நிலவுகிறது.
நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகா தேவன் எஸ்டேட், மேபீல்டு, நெல்லிக்குன்னு, மசினகுடி, சிங்காரா உள்ளிட்ட பகுதிகளில் புலியைத் தேடும் பணி கடந்த 21 ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் நடைபெறுகிறது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு முதுமலை புலிகள் காப்பக வனத்தில் உள்ள ஓம்பட்டா நீா்த்தேக்க வனப் பகுதியில் வனத் துறை வைத்திருந்த கண்காணிப்பு கேமராவில் புலியின் நடமாட்டம் பதிவானதை வனத் துறையினா் கடந்த செவ்வாய்க்கிழமை உறுதி செய்தனா்.
அதைத் தொடா்ந்து, தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள குழுவினா் போஸ்பாறா சங்கிலி கேட் வனப் பகுதிக்குள் நுழைந்தனா். அப்போது புலியின் நடமாட்டத்தை பாா்த்து உறுதி செய்தனா். ஆனால், வனத்தில் உள்ள புதருக்குள் புலி நடமாடுவதால் மயக்க ஊசி செலுத்த முடியாமல் குழுவினா் வெளியேறினா்.
இதைத் தொடா்ந்து, புலியை பிடிக்கும் பணியில் மோப்பநாய்களும், கும்கி யானைகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதற்காக வனப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மரங்களில் பரண் அமைத்து அதில் அமர்ந்திருந்து வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், மசினகுடி-முதுமலை சாலையில் புலி நடந்து சென்றதை பார்த்த வனத்துறையினர் வியாழக்கிழமை இரவு கால்நடை மருத்துவக் குழுவினரின் உதவியுடன் புலிக்கு மயக்க ஊசி செலுத்தினர். நான்கு முறை மயக்க ஊசியை செலுத்தியதில், 2 ஊசிகள் புலியின் உடம்பில் சென்று சேர்ந்த நிலையிலும் புலி வனப்பகுதிக்குள் அரை மயக்க நிலையில் தப்பிச் சென்றது.
இதனைத் தொடர்ந்து தப்பிச் சென்ற புலியை தேடும் பணியில் 21ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.