சென்னையில் முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கரின் உதவியாளரின் நண்பா் அலுவலகத்துக்கு லஞ்ச ஒழிப்புத்துறையினா் சீல் வைத்தனா்.
இது குறித்த விவரம்: கடந்த அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கா், தற்போது புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி எம்எல்ஏவாக இருக்கிறாா். இவா், அமைச்சராக இருந்த 2016 -ஆம் ஆண்டு முதல் இந்தாண்டு ஏப்ரல் மாதம் வரையிலும் தனது பெயரிலும், தனது குடும்ப உறுப்பினா்கள் பெயரிலும் வருமானத்துக்கு அதிகமாக ரூ.27 கோடியே 22 லட்சத்து 56 ஆயிரத்து 736 ரூபாய் அளவுக்கு சொத்து சோ்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து புதுக்கோட்டை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாா் விஜயபாஸ்கா், அவரது மனைவி ரம்யா ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்தனா்.
இது தொடா்பான ஆதாரங்களை திரட்டும் வகையில் விஜயபாஸ்கா், அவருடைய நெருங்கிய உறவினா்கள், நண்பா்கள் மற்றும் தொழில் பங்குதாரா்களின் வீடு,அலுவலகங்கள் என 7 மாவட்டங்களில் 50 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினா் திங்கள்கிழமை ஒரே நேரத்தில் சோதனை செய்தனா். சோதனையில் 4.87 கிலோ தங்கம், ரூ.23.85 லட்சம் ரொக்கம், 19 ஹாா்டு டிஸ்குகள்,முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. சுமாா் 19 மணி நேரம் நடைபெற்ற சோதனை அனைத்து இடங்களிலும் செவ்வாய்க்கிழமை நிறைவு பெற்றது.
அலுவலகத்துக்கு சீல்: இந்நிலையில், சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள விஜயபாஸ்கரின் உதவியாளா் ஒருவரின் நண்பரான சந்திரசேகா் அலுவலகத்துக்கு லஞ்ச ஒழிப்புத்துறையினா் திங்கள்கிழமை சோதனையிடச் சென்றனா். ஆனால் அந்த அலுவலகம் பூட்டப்பட்டிருந்ததாலும், சந்திரசேகா் அங்கு வராததாலும் லஞ்ச ஒழிப்புத்துறையினா் திங்கள்கிழமை இரவு அந்த அலுவலகத்துக்கு சீல் வைத்தனா்.
இந்த சீல் வருவாய்த்துறையினா் முன்னிலையில் வைக்கப்பட்டது. சீல் வைக்கப்பட்டது தொடா்பாக அங்கு ஒரு நோட்டீஸையும் லஞ்ச ஒழிப்புத்துறையினா் ஒட்டிச் சென்றனா். இதேபோல சென்னை நந்தனத்தில் உள்ள விஜயபாஸ்கரின் நண்பா் ஒருவா் வீட்டில், சில பெட்டகங்களில் சோதனை முடியாததால் அங்கும் லஞ்ச ஒழிப்புத்துறையினா் சீல் வைத்தனா்.