நாமக்கல்: எருமப்பட்டி ஒன்றிய துணைத் தலைவர் பதவி தேர்தல் தொடர்பாக 10 உறுப்பினர்கள் கடத்தப்பட்ட எழுந்த புகாரால் துணைத் தலைவர் தேர்தல் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் வரதராஜன் கடந்த ஆண்டு உயிரிழந்தார். அவர் வெற்றி பெற்ற 15-ஆவது வார்டுக்கான இடைத்தேர்தல் அக். 9-இல் நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக வேட்பாளர் முத்துக்கருப்பன் வெற்றி பெற்றார்.
இந்த ஊராட்சி ஒன்றியத்தில் அதிமுக 8, பாஜக 1, சுயச்சை 1, திமுக 5 இடங்களில் உள்ளது. எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பதவியை கைப்பற்ற திமுக முயற்சித்து வருகிறது.
இந்த நிலையில் அதிமுக மற்றும் கூட்டணி வார்டு உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை காலை நாமக்கல் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
எருமப்பட்டி காவல் நிலையத்தில் வியாழக்கிழமை, 10 வார்டு உறுப்பினர்கள் அதிமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணியால் கடத்தப்பட்டதாக புகார் மனு அளிக்கப் பட்டிருந்தது. இதனால் மாநில தேர்தல் ஆணையர் உத்தரவின் பேரில் எருமப்பட்டி ஒன்றியத்தில் துணைத் தலைவர் தேர்தல் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
10-வார்டு உறுப்பினர்களும் தற்போது அதிமுக மாவட்ட அலுவலகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் தேர்தல் பிற்பகல் 2 மணியளவில் அதற்கான அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இதுகுறித்து முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி விளக்கம் அளித்தாவது; எருமப்பட்டி ஒன்றியத்தில் அதிமுக வெற்றி பெறும் நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துணையுடன் தேர்தலை ரத்து செய்துள்ளனர். நாங்கள் அங்கு சென்று கேள்வி கேட்கும் பட்சத்தில் எங்களை கைது செய்வதற்கான நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தற்போது அதிமுக மாவட்ட அலுவலகத்தில் 10 உறுப்பினர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கடந்த 4 நாள்களாக நான் சென்னையில்தான் தங்கி இருந்தேன். ஆனால் நான் வார்டு உறுப்பினர்களை கடத்தியதாக பொய்யான புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன் என்றார்.