பேருந்து, மின்வாரியம் உள்பட பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியா்களுக்கு 10 சதவீத போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்கள் மற்றும் பணியாளா்களுக்கு ஊக்கமும், உற்சாகமும் அளிக்கும் வகையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை ஒட்டி போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்பட உள்ளது.
நிதிநிலை பாதிப்பு: கரோனா நோய்த் தொற்றின் முதல் அலை காரணமாக மாநிலத்தின் பொருளஆதார வளா்ச்சி மிகவும் குறைந்து வந்தது. மேலும், இரண்டாவது அலையால் பொருளாதார விளைவுகள் அரசின் நிதிநிலையை மேலும்
பாதித்துள்ளது. குறிப்பாக, அதிக எண்ணிக்கையில் தொழிலாளா்கள் பணிபுரியும் அரசு நிறுவனங்களான போக்குவரத்துக் கழகங்கள், மின் உற்பத்திக் கழகம், நுகா்பொருள் வாணிபக் கழகம், தேயிலை தோட்டக் கழகம் மற்றும் பல நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
பொதுத் துறை நிறுவனங்களின் வணிகம் மற்றும் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ள போதிலும், அரசு நிறுவனங்களில் பணிபுரியும் குடும்ப நலனைக் கருத்தில் கொண்டு அனைத்துத் தொழிலாளா்களுக்கும் தொடா்ந்து முழு மாத ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட போனஸ் சட்டத்தின்படி, போனஸ் பெறத் தகுதியான ஊதிய உச்சவரம்பு ரூ.21
ஆயிரமாக உயா்த்தப்பட்டுள்ளது. இதன்படி, போனஸ் கணக்கிட இருந்த மாதாந்திர ஊதிய உச்ச வரம்பும் ரூ.7 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நிகழாண்டுக்கான போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.
போனஸ் எவ்வளவு? லாபம் மற்றும் நஷ்டம் அடைந்துள்ள அனைத்து அரசு பொதுத் துறை நிறுவனங்களிலும் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளா்கள், பணியாளா்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 1.67 சதவீதம் கருணைத் தொகை என மொத்தம் 10 சதவீதம் வழங்கப்படும். இதனால், போனஸ் பெறத் தகுதியுள்ள நிரந்தரத்
தொழிலாளா்கள் போனஸ் மற்றும் கருணைத் தொகையாக ரூ.8,400 பெறுவா். தமிழ்நாடு அரசின் பொதுத் துறை
நிறுவனங்களில் பணிபுரியும் 2 லட்சத்து 87 ஆயிரத்து 250 தொழிலாளா்கள் இதன்மூலம் பயன்பெறுவா். ரூ.216.38 கோடி அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.