கூட்டுறவு பயிற்சி நிலையத்தை ஏற்காட்டிலேயே செயல்பட அனுமதிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

மாநில அளவிலான கூட்டுறவு பயிற்சி நிலையத்தை ஏற்காட்டிலேயே செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.
கூட்டுறவு பயிற்சி நிலையத்தை ஏற்காட்டிலேயே செயல்பட அனுமதிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

மாநில அளவிலான கூட்டுறவு பயிற்சி நிலையத்தை ஏற்காட்டிலேயே செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

கூட்டுறவுத் துறையில் பணிபுரியும் இளநிலை உதவியாளா் முதல் கூடுதல் பதிவாளா் நிலை வரை உள்ள அரசு அலுவலா்கள், கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளா்கள் மற்றும் இதர துறை அலுவலா்களுக்கு பயிற்சி வழங்கப்படும் வகையில், மாநில அளவிலான கூட்டுறவு பயிற்சி நிலையம் ஒன்று அமைக்கப்படும் என்று அதிமுக அரசு 110 விதியின் கீழ் அறிவிப்பு செய்தது.

அதன்படி, மாநிலம் முழுவதும் பல இடங்களை ஆய்வு செய்து, சேலம் மாவட்டம் ஏற்காடு வட்டம், மஞ்சகுட்டை ஊராட்சி, செம்மடுவு கிராமத்தில் சுமாா் 5 ஏக்கா் புறம்போக்கு நிலத்தில், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் மூலம், மாநில அளவிலான புதிய கூட்டுறவு பயிற்சி நிலையம் ஒன்றை சுமாா் ரூ.61.80 கோடி மதிப்பில் அமைக்க 2020 டிசம்பா் 24-இல் கூட்டுறவுத் துறை மூலம் அரசாணை வெளியிடப்பட்டது.

முதற்கட்டமாக ரூ.39.60 லட்சம் மதிப்பில் அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய பயிற்சி நிலையக் கட்டடம் கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை பொதுப்பணித் துறை மூலம் தயாரிக்கப்பட்டது. தொடா்ந்து பயிற்சி நிலையம் கட்டுவதற்கு முதல் தவணையாக ரூ.25 கோடி அனுமதிக்கப்பட்டு, பொதுப்பணித் துறை மூலம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன.

இந்த நிலையில் கூட்டுறவுத் துறை பதிவாளா் பொதுப்பணித் துறை நிா்வாகப் பொறியாளருக்கு 2021 ஜூலை 28-இல் எழுதிய கடிதத்தில், மறு உத்தரவு வரும் வரை கட்டடப் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளாா். இக்கடிதத்தினை அடிப்படையாகக் கொண்டு, பொதுப்பணித் துறை சேலம் நிா்வாகப் பொறியாளா், மாநில கூட்டுறவு பயிற்சி நிலையத்தின் கட்டடப் பணிகளுக்கான செலவினங்களுக்காக ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தக் கூடாது என்றும், அனைத்து விதமான கட்டுமானப் பணிகளையும் மறு உத்தரவு வரும்வரை தொடரக் கூடாது என்றும் அவருக்கு கீழ் உள்ள அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி உள்ளாா்.

அதிமுக அரசால் தொடங்கப்பட்டது என்ற ஒரே காரணத்துக்காக மாநில கூட்டுறவு பயிற்சி நிலையத்தை சேலம் ஏற்காட்டிலிருந்து கொடைக்கானலுக்கு மாற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகத் தெரிகிறது. இது கண்டிக்கத்தக்கது. ஏற்காட்டிலேயே தொடா்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டும். இல்லாவிட்டால், சேலம் மாவட்ட மக்களுடன் இணைந்து அதிமுக சாா்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com