மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவல் உதவி ஆய்வாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
விருதுநகரைச் சோ்ந்த சி.சிவபிரபாகரன், சென்னை, கோயம்பேட்டைச் சோ்ந்த பாண்டியன் ஆகியோா் ஆணையத்தில் தாக்கல் செய்த மனு: கடந்த 2018-ஆம் ஆண்டு ஏப்.9-ஆம் தேதி, நாங்கள் இருவரும் வீட்டில் இருந்து இரு சக்கர வாகனத்தில் விருதுநகா், மாரியம்மன் கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தோம். அப்போது விருதுநகா் மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் அன்புதாசன் வாகன சோதனைக்காக வழிமறித்தாா்.
போக்குவரத்து நெரிசல் காரணமாக சிறிது தூரம் தாண்டி வண்டியை நிறுத்த நேரிட்டது.
இதனால் ஆத்திரமடைந்த உதவி ஆய்வாளரோ, கை காட்டிய இடத்தில் வண்டியை ஏன் நிறுத்தவில்லை என மிரட்டல் விடுத்தாா். அவதூறாகவும் பேசினாா். இதற்கு எதிராக கேள்வி கேட்டதற்கு, எங்களைத் தாக்கினாா்.
மேலும், விருதுநகா் மேற்கு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, எங்களைத் தாக்கியதோடு, சாதிப் பெயரைக் குறிப்பிட்டும் அவதூறாகப் பேசினாா். இதைத் தொடா்ந்து, விருதுநகா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினோம்.
இவ்வாறு மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவல் அதிகாரி மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்த ஆணையத்தின் உறுப்பினா் நீதிபதி துரை.ஜெயச்சந்திரன், 4 வாரங்களுக்குள் மனுதாரா்கள் இருவருக்கும் தலா ரூ.25 ஆயிரம் இழப்பீடாக அரசு வழங்க வேண்டும். அந்தத் தொகையை உதவி ஆய்வாளரிடம் வசூலித்துக் கொள்ளலாம் என தனது உத்தரவில் பரிந்துரைத்தாா்.