தீபாவளியன்று ஜெயின் மதத்தினர் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளைத் தவிர்த்து மற்ற பகுதிகளில் இறைச்சிக் கடைகளைத் திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
"இந்த ஆண்டு வரும் 04.11.2021 அன்று தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படவுள்ள அதே நாளில் மகாவீரர் ஜெயந்தி நாளும் வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மகாவீரர் ஜெயந்தி நாளன்று இறைச்சிக் கடைகள் மூடப் படக்கூடிய நடைமுறை தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வரும் சூழலில், பொதுமக்களின் உணர்வுகளைக் கருத்தில் கொண்டும் பல்வேறு அமைப்புகளிடமிருந்து வந்த கோரிக்கைகளைப் பரிசீலித்து தீபாவளி நாளன்று தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இறைச்சிக் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது.
அதேவேளையில் ஜெயின் மதத்தினர் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளிலுள்ள இறைச்சிக் கடைகளும், ஜெயின் மத வழிபாட்டுத் தலங்களைச் சுற்றியுள்ள இறைச்சிக் கடைகளும் மூடப்படும்."
முன்னதாக, தீபாவளியன்று இறைச்சிக் கடைகள் இயங்க சென்னை மாநகராட்சி தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.