திருச்சி: ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு திருச்சி மாவட்டத்தில் புதன்கிழமை முதல்கட்டமாக 540 பள்ளிகள் திறக்கப்பட்டன. மகிழ்ச்சியுடன் வந்த மாணவர்களை ஆசிரியர்கள் உற்சாகமாக வரவேற்று வகுப்பறைக்கு அனுப்பினர்.
கரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த 2020ஆம் ஆண்டு முதல் திருச்சி மாவட்டத்தில் பள்ளிகள் மூடப்பட்டன. பிளஸ் 2 தேர்வுகள் மட்டுமே நடைபெற்றன. ஒன்று முதல் பிளஸ் 1 வரை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.
பின்னர், 2020-2021 ஆம் கல்வியாண்டில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றன. கல்வித்தொலைக்காட்சியிலும் ஆசிரியர்கள் வகுப்புகளை நடத்தினர். ஜனவரி மாதம் வகுப்புகள் தொடங்கப்பட்ட நிலையில் இரண்டாவது அலை பரவத் தொடங்கியது. ஒன்று முதல் 12ஆம் வகுப்பு வரை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு ஆல்பாஸ் என அறிவிக்கப்பட்டது. அரசு அமல்படுத்திய கடும் கட்டுப்பாடுகள் காரணமாக கரோனா தொற்று தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. எனவே 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்தது.
இதன்படி, திருச்சி மாவட்டத்தில் 540 பள்ளிகள் புதன்கிழமை திறக்கப்பட்டன.
திருச்சி, லால்குடி, முசிறி, மணப்பாறை என 4 கல்வி மாவட்டங்களில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், சுயநிதி பள்ளிகள் என்ற வகையில் 9ஆம் வகுப்பில் 40,153 மாணவர், மாணவிகள், 10ஆம் வகுப்பில் 39,676 மாணவ, மாணவிகள், 11ஆம் வகுப்பில் 35 ஆயிரத்து 639 மாணவ, மாணவிகள், 12ஆம் வகுப்பில் 36 ஆயிரத்து 90 மாணவ, மாணவிகள் என மொத்தம் ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 558 மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
பல மாதங்களுக்குப் பிறகு ஆசிரியர்களையும், சக மாணவர்களையும் பார்க்கும் ஆவலில் மிகுந்த மகிழ்ச்சியுடன் மாணவ, மாணவிகள் வந்திருந்தனர். அனைவரையும் ஆசிரியர்கள் உற்சாகமாக வரவேற்றனர். நுழைவு வாயிலில் அனைவருக்கும் கிருமி நாசினி மருந்து அளித்து கைகளை சுத்தப்படுத்திய பிறகே அனுமதிக்கப்பட்டனர்.
மேலும், சோப்பு திரவம் பயன்படுத்தி கைகளை தண்ணீரில் கழுவும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. 96 சதவீத ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். வகுப்புக்கு 20 மாணவர்கள் என்ற அடிப்படையில் அமர வைத்து பாடங்கள் நடத்தப்பட்டன.