சென்னை: தமிழ்நாட்டில் ஓராண்டில் மட்டும் 3, 208 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக சமூகநலத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேரவையில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாட்டில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு ஜூலை வரையில் 16, 281 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. கடந்த 2020-ஆம் ஆண்டில் மட்டும் 3,208 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றன.
குழந்தைத் திருமணத்தில் இருந்து மீட்கப்பட்ட பெண் குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளித்திடும் வகையில், கடந்த நிதியாண்டில் 1,021 பெண் குழந்தைகளுக்கு மாதம் தலா ஆயிரம் ரூபாய் வீதம் மூன்று மாதங்கள் தொழிற்பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.