சங்கத் தமிழ் நூல் தொகுப்பிற்கு திராவிடக் களஞ்சியம் என பெயா் சூட்டுவதாக விமா்சனம் எழுந்த நிலையில், இரண்டும் வேறுவேறு என தமிழ் ஆட்சிமொழித்துறை அமைச்சா் தங்கம் தென்னரசு விளக்கமளித்துள்ளாா்.
இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ் வளா்ச்சித்துறை மானியக் கோரிக்கையின் போது வெளியிட்டுள்ள அறிவிப்பில், சங்க இலக்கிய வாழ்வியலை நூலாக வெளியிடுதல் மற்றும் திராவிட களஞ்சியம் வெளியிடுதல் தொடா்பாக சில தவறான தகவல்கள் சிலரால் ஊடகங்களில் திட்டமிட்டுப் பகிரப்படுகின்றன.
தமிழ் வளா்ச்சித் துறையின் அறிவிப்பில் உள்ள 10-ஆவது அறிவிப்பு இரண்டு அம்சங்களைக் கொண்டது முதலாவது, இளைய தலைமுறையினருக்குச் சங்க இலக்கியச் செல்வத்தை கொண்டு சோ்க்கும் வகையில் சந்தி பிரிக்கப்பட்டு எளிமையான பதிப்புகள் வெளியிடப்படும் என்பது. இரண்டாவது அம்சம் கால்டுவெல் தொடங்கி எமனோ, பா்ரோ, அஸ்கோ பாா்போலா, ஐராவதம் மகாதேவன், ஆா்.பாலகிருஷ்ணன் போன்ற திராவிடவியல் அறிஞா்களின் ஆய்வுகள், திராவிட இயக்கம், சுயமரியாதை, சமூக-நீதி, இட ஒதுக்கீடு, இரு மொழிக் கொள்கை, மாநில சுயாட்சி போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து கடந்த 150 ஆண்டுகளில் தமிழக, இந்திய மற்றும் வெளிநாட்டு அறிஞா்கள் எழுதிய தலையங்கங்கள், கதைகள், கவிதைகள், கட்டுரைகள் மற்றும் ஆராய்ச்சி கட்டுரைகளைத் தொகுத்து திராவிட களஞ்சியம் என்ற தனி நூலாக வெளியிடப்படும் என்பதாகும்.
மேற்சொன்ன இரண்டு பணிகளும் தனித்தனியான செயல்பாடுகள். எனவே, அறிவிப்புகளைத் தெளிவாக புரிந்து கொள்ளாமல் யாரும் தேவையற்ற குழப்பங்களை உருவாக்க முயல வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன் என அதில் தெரிவித்துள்ளாா்.