புதுதில்லி: உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க மேலும் 6 மாதம் அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் மனுத் தாக்கல் செய்துள்ளது.
செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், மேலும் 6 மாதம் அவகாசத்தை நீட்டிக்கக் கோரி புதிய இடைக்கால மனுவை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.
ஏற்கனவே இரண்டு முறை அவகாசம் கோரியிருந்த நிலையில், தற்போது மூன்றாவது முறையாக கூடுதல் அவகாசம் கோரியுள்ளது மாநில தேர்தல் ஆணையம்.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து சமீபத்தில் தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்த வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக வரும் 6 ஆம் தேதி பிற்பகல் 12 மணியளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.