காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 16,670 கன அடியிலிருந்து 22,875 கன அடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் கன அடியாக நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தமிழகத்தில் மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பரவலாக மழை பெய்து வருகிறது. கபினி கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்தும் காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் சனிக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 16,670 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து, ஞாயிற்றுக்கிழமை காலை வினாடிக்கு 22,875 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 5,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் சனிக்கிழமை காலை 69.39 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 71.10 அடியாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் 1.71அடி உயர்ந்துள்ளது.
அணையிலிருந்து கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 650 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 33.65 டி.எம்.சியாக இருந்தது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து வந்த நிலையில் நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.