மணப்பாறை அடுத்த கொட்டப்பட்டியில் தடை மீறி வைக்கப்பட்ட பிரதிஷ்டை செய்யப்பட்ட 5 அடி உயர செல்வ விநாயகர் சிலை போலீஸார் மற்றும் வருவாய்த்துறையினரால் அகற்றப்பட்டது.
கரோனா பரவலைத் தடுக்க வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்களில் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், விநாயகா் சதுா்த்தியை வீடுகளிலேயே கொண்டாடவும் அரசு அறிவுறுத்தியது.
இதையடுத்து திருச்சி மாவட்டம், மணப்பாறையில், விநாயகர் சதுர்த்தி விழா பொது இடத்தில் கொண்டாட தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில், இதுகுறித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு விழா அமைப்பினருக்கு டி.எஸ்.பி ஜனனிபிரியா தலைமையிலான போலீஸார் அறிவுறுத்தல் கூட்டத்தில் ஆலோசனைகள் வழங்கியிருந்தனர்.
இந்நிலையில், மணப்பாறையில் 9 இடங்களிலும், வையம்பட்டியில் 14 இடங்களிலும் பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது. இதில் அநேக இடங்களில் ஆலயங்கள், தனிநபர் இடங்கள் ஆகியவற்றில் சிலைகள் வைக்கப்பட்டிருந்தாலும், மணப்பாறை அடுத்த கொட்டப்பட்டியில் 5 அடி உயர செல்வ விநாயகர் சிலையினை பாஜக மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் பொது இடத்தில் பிரதிஷ்டை செய்திருந்தது அசாதாரண சூழலை உருவாக்கியது.
அதனைத்தொடர்ந்து அப்பகுதியில் காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் போலீஸாரும், தனி வட்டாட்சியர் பன்னீர்செல்வம் தலைமையில் வருவாய்த்துறையினரும் குவிக்கப்பட்டனர். பின் விழா குழுவினர் தரப்பில் வழிபாடு நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து சிலையை வருவாய்த்துறையினர் கைப்பற்றி எடுத்து சென்றனர்.