தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறப்பது குறித்து வருகிற 15 ஆம் தேதி அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் காவேரி நகர் பகுதியில் தனது தொகுதி வளர்ச்சி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.16.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நியாய விலைக்கடையை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று திறந்து வைத்தார்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதில் ஒருமித்த நிலைப்பாட்டில் உள்ளது.சட்டப்பேரவையில் இதுகுறித்த தீர்மானத்துக்கு அரசியல் கட்சிகள் அனைத்தும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.
மேலும், தமிழகத்தில் இன்று நடக்கவிருக்கும் தேர்வு கடைசி நீட் தேர்வாக இருக்குமா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், நீட் தேர்வை எதிர்த்து போரிடுகிறோம், வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது' என்று கூறினார்.
தொடர்ந்து, தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறப்பது குறித்து வருகிற 15 ஆம் தேதி அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதன்பின்னர் முதல்வர் முடிவெடுப்பார் என்று கூறினார்.