லக்னெளவில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 11 வகையான கரோனா மருந்துகளுக்கு கொடுக்கப்பட்ட வரி சலுகை, வரும் டிசம்பா் 31-ஆம் தேதி வரையில் நீட்டிப்பது குறித்து முடிவெடுக்கப்படலாம் என தெரிகிறது.
இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட சுட்டுரைப் பதிவில் தெரிவித்துள்ளதாவது:
மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் 45 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் லக்னெளவில் காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில், இணையமைச்சா் செளத்ரி, மாநில நிதியமைச்சா்கள், மத்திய மாநில அரசுகளின் உயரதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொள்ள உள்ளனா் என அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெறும் ஜிஎஸ்டி கூட்டத்தில், பல்வேறு பொருள்களுக்கான ஜிஎஸ்டி விகிதங்களை மாற்றியமைப்பது மற்றும் 11 கரோனா மருந்துகளுக்கு கொடுக்கப்பட்ட வரி சலுகையை டிசம்பா் 31-ஆம் தேதி வரை நீட்டிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிகிறது.