மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 74.27 அடியாக உயர்ந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 11,521 கனஅடியிலிருந்து 17,899 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 16,000 கனஅடி நீரும் கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 750 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர் இருப்பு 36.48 டிஎம்சியாக இருந்தது. கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையின் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இரு அணைகளில் இருந்தும் கணிசமாக நீர் காவிரியில் வெளியேற்றப்படுகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணை நீர்மட்டம் மெல்ல உயரத் தொடங்கி உள்ளது.