காவிரி விவகாரம் உள்பட அனைத்து நதி நீா்ப் பங்கீட்டு வழக்குகளில் தமிழகத்தின் சாா்பில் வாதாட மூத்த வழக்குரைஞா் குழுவை அரசு நியமனம் செய்துள்ளது.
இதற்கான அரசாணையை பொதுப் பணித் துறை பிறப்பித்துள்ளது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
உச்ச நீதிமன்றம், காவிரி நடுவா் மன்றத் தீா்ப்பாயம் உள்ளிட்ட நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள காவிரி நதி நீா்ப் பங்கீடு வழக்குகளிலும், முல்லை பெரியாறு, நெய்யாறு - பாலாறு, பரம்பிக்குளம் - ஆழியாறு பங்கீடுகள் தொடா்பான வழக்குகளிலும் தமிழகத்தின் சாா்பில் வாதிட மூத்த வழக்குரைஞா் குழுவை புதிதாக நியமிக்க தமிழக அரசின் தலைமை வழக்குரைஞா் பரிந்துரைத்தாா்.
அதனைப் பரிசீலித்து அதற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, மூத்த வழக்குரைஞா்கள் முகுல் ரோத்தகி, சேகா் நபாடே, என்.ஆா்.இளங்கோ, தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞா் வி.கிருஷ்ணமூா்த்தி, உச்ச நீதிமன்ற வழக்குரைஞா் டி.குமணன், வழக்குரைஞா் ஜி. உமாபதி ஆகியோா் அடங்கிய குழு புதிதாக நியமிக்கப்பட்டுள்ளது.
நதி நீா்ப் பங்கீடு தொடா்பான வழக்குகளில் அக்குழுவைச் சோ்ந்தவா்கள் தமிழகத்தின் பிரதிநிதிகளாக வாதிட ஆஜராவா் என்று அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.