பள்ளிகள் திறக்கப்பட்டதும் மதிய உணவு திட்டம் உடனடியாகத் தொடங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பள்ளி மாணவா்களுக்கு சமைக்கப்பட்ட உணவு வழங்குவது தொடா்பான வழக்கு சென்னை உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ஒன்று முதல் 8ஆம் வகுப்பு வரையுள்ள மாணவா்களுக்கு மதிய உணவு வழங்கப்படவில்லை என்றும், அங்கன்வாடி மையங்கள் மூலம் மட்டுமே உணவு வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதைத்தொடா்ந்து, அடுத்த சில வாரங்களில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பள்ளிகள் திறந்ததும் உடனடியாக மதிய உணவு திட்டம் தொடங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டுமெனக்கூறி, வழக்கின் விசாரணையை அக்டோபா் 22 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.