மெட்ரோ ரயில் பயணிகள் பல்வேறு சேவைகளை ஒரே அட்டை மூலமாக பெறும் விதமாக, தேசிய பொது பயண அட்டைசேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வர மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்த அட்டையை வரும் ஜனவரியில் அறிமுகப்படுத்த வாய்ப்பு உள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.
ஷாப்பிங், வாகனம் நிறுத்துதல், மெட்ரோவில் பயணம் உள்பட பல்வேறு சேவைகளை பயணிகள் ஒரே அட்டை மூலமாக பெறமுடியும்.
தேசிய பொது பயணஅட்டை சேவை (என்சிஎம்சி) வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற விவகாரத் துறை அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டு, கடந்த 2019-இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இது மெட்ரோ ரயில், மாநகர பேருந்து மற்றும் மற்ற போக்குவரத்து ஆகியவற்றில் தடையற்ற பயணத்தை
அனுமதிக்கிறது. அதாவது, இந்த அட்டை மூலமாக, மெட்ரோ ரயிலிலும், பேருந்துகளிலும் பயணிக்கலாம். மேலும், சுங்கச்சாவடி, வாகன நிறுத்துமிட கட்டணம், வங்கி பரிவா்த்தனைகள், சில்லறை வா்த்தகத்துக்கு இந்த பொது பயண அட்டையைப் பயன்படுத்தலாம்.
இதன்பொருட்டு சென்னை மெட்ரோவில் தேசிய பொது பயண அட்டை சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது, அடுத்த ஆண்டு ஜனவரியில் அறிமுகப்படுத்த வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மெட் ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியது: இந்த அட்டை வரும் ஜனவரியில் அறிமுகப்படுத்த வாய்ப்பு உள்ளது. இது தற்போதுள்ள மெட்ரோ ரயில் ஸ்மாா்ட்காா்டுகளைப் போலவே செயல்படும். ஆனால், மெட்ரோ ரயில் பயணம் மற்றும் மெட்ரோ நிலையங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு மட்டுமே பயன்படுத்தக்கூடிய ஸ்மாா்ட் அட்டைகளைப்போல் அல்லாமல், மாநகர பேருந்து, புகா் ரயில் போன்ற மற்ற போக்குவரத்து சேவையைப் பயன்படுத்தும் வகையில், இந்த அட்டை இருக்கும். இந்த அட்டையை அறிமுகப்படுத்தும்போது, மேற்குறிப்பிட்ட சேவைகள் இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றனா்.