தில்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஏப்.21ஆம் தேதி ஆஜராக டிடிவி தினகரனுக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, ஆர்.கே.நகர் சட்டப் பேரவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. தினகரனின் உறவினர் வி.கே. சசிகலா தலைமையிலான அணியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியும் கட்சியின் இரட்டை இலைச் சின்னத்திற்கு உரிமை கோரியதால், அதிமுகவின் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. இந்த நிலையில், இடைத்தேர்தலில் வி.கே.சசிகலா அணிக்கு அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை வழங்குவதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க தினகரனிடம் பணம் வாங்கியதாக இடைத்தரகர் சுகேஷ் (எ) சந்திரசேகர் கடந்த 2017, ஏப்ரலில் ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தில்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
இதையும் படிக்க- ஏப்ரல் 21-இல் இந்தியா வருகிறார் பிரிட்டன் பிரதமர்
இந்த வழக்கில் டிடிவி தினகரனையும் தில்லி போலீஸார் கைது செய்தனர். தினகரனுக்கும் சந்திரசேகருக்கும் இடையே ரூ.50 கோடி பேரம் நடைபெற உதவியதாகக் கூறி, தினகரனின் உதவியாளர் மல்லிகார்ஜுனாவும் கைது செய்யப்பட்டார். அவர்கள் மீது காவல் துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் டிடிவி தினகரன் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில், அதிமுகவில் இருந்து டி.டி.வி.தினகரன் மற்றும் வி.கே. சசிகலா ஆகிய இருவரும் 2017, ஆகஸ்ட் மாதத்தில் நீக்கப்பட்டனர். இதை எதிர்த்து இருவரும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அந்த வழக்கில் இருந்து பின்னர் டிடிவி தினகரன் விலகிய நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) எனும் அரசியல் கட்சியைத் தொடங்கி செயல்பட்டு வருகிறார். அவர் இதன் பொதுச் செயலாளராகவும் உள்ளார்.
இந்த சூழ்நிலையில், தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், ஏற்கெனவே வேறு பல வழக்குகளில் திகார் சிறையில் இருந்து வரும் சுகேஷ் சந்திரசேகரை அமலாக்கத் துறையினர் இந்த மாதம் 4-ஆம் தேதி கைது செய்து வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர். இது தொடர்புடைய விசாரணையை மேற்கொண்டு தொடரும் வகையில் டி.டி.வி. தினகரனிடம் விசாரணை நடத்த அவரை தில்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சில தினங்களுக்கு முன் அமலாக்கத் துறையினர் சம்மன் அனுப்பியிருந்தனர். அதன்படி, கடந்த 12ஆம் தேதி தில்லி அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜரான தினகரனிடம் சுமார் 11 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.