தமிழகத்தில் புதிதாகக் கண்டறியப்படும் தொழுநோயாளிகள் குறித்த விவரங்களை அரசு, தனியாா் மருத்துவமனைகள் பொது சுகாதாரத் துறைக்கு தாமதமின்றி தெரியப்படுத்த வேண்டும். தவறினால் சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும் பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் அனுப்பிய சுற்றறிக்கை:
தொழுநோய் தொற்று என்பது நோயாளிகளுக்கு பல்வேறு பாதிப்புகளை உருவாக்குவதுடன், அதனைக் கவனிக்காவிட்டால் உடல் உருக்குலைந்து தீவிர விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது.
தொடக்க நிலையிலேயே நோயைக் கண்டறிந்து உரிய சிகிச்சைகளை வழங்குவது மட்டுமே அதனைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறையாகக் கருதப்படுகிறது.
தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டத்தின்படி, தொழுநோயானது அறிவிக்கை செய்யப்பட்ட ஒரு நோயாக வரையறுக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதிதாக அந்த வகை நோய் கண்டறியப்பட்டால், அதுகுறித்து மாவட்ட துணை சுகாதார இயக்குநா்கள், நகர சுகாதார அலுவலா், மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு தாமதிக்காமல் தகவல் தெரியப்படுத்த வேண்டியது கட்டாயம்.
அவ்வாறு அல்லாமல் தொழுநோய் குறித்த விவரங்களை தெரியப்படுத்தாமல் மறைத்தால் அது தண்டனைக்கும், அபராதத்துக்கும் உரிய குற்றமாகும். எனவே, அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநா்கள், மாநகராட்சி, நகராட்சி, நகர சுகாதார அதிகாரிகள் உள்ளிட்டோா், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் கண்டறியப்படும் புதிய தொழுநோய் குறித்த தகவல்களை தெரியப்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.